டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வு முடிந்து இரண்டரை மாதங்களுக்குளேயே வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி
Nov 12 2019 8:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள 6,491 காலிப்பணியிடங்களுக்கு, கடந்த ஜூன் 16-ம் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. அதில், 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தங்களது தர வரிசையினையும், அவர்கள் பெற்ற மதிப்பெண்களையும், தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேவையான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்றும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.