ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு - கிராம ஊராட்சி வார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மனு
Dec 15 2019 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர, மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை, மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து, எஞ்சிய 27 மாவட்டங்களில், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு, ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கிய நிலையில், மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் இல்லை.
இதுவரை, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 814 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35 ஆயிரத்து 464 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 ஆயிரத்து 117 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 264 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.