அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக, 2 நாள் பயணமாக, இன்று இந்தியா வருகிறார். அவரை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி, அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அவரது பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில், வரும் நவம்பர் மாத இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, டிரம்ப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
அவருடன், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷ்னெர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள்.
"ஏர் போர்ஸ் ஒன்" விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்துக்கு பகல் 12.30 மணிக்கு வரும் டிரம்பை, பிரதமர் திரு. நரேந்திர மோதி வரவேற்கிறார்.
டிரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. டிரம்பும், மோடியும் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாக செல்கின்றனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரணி முடிந்தவுடன் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறார். அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். இதனைத்தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்தை இருவரும் பார்வையிடுகின்றனர்.
அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இருவரும் உரையாற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்கிறார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு, தாஜ்மகாலை பார்ப்பதற்காக, அகமதாபாத்தில் இருந்து டிரம்ப் விமானத்தில் ஆக்ரா செல்கிறார். பின்னர் ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் டிரம்ப், அங்கு ஓய்வு எடுக்கிறார்.
25-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு. ராம்நாத் கோவிந்தை டிரம்ப் சந்திக்கிறார். பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார். அப்போது இரு நாடுகள் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து, டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். டிரம்ப் வருகையையொட்டி, வரலாறு காணாத வகையிலான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.