டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம் - நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்
Feb 27 2020 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும், ஆதரிப்பவர்களுக்கும் இடையே, டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியின் சில இடங்களில் இன்றும் பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. டெல்லி கிழக்குப்பகுதியில் உள்ள பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், படிப்படியாக அமைதி நிலை திரும்புவதை காண முடிவதாகவும், காவல்துறையினர் தங்களது பணியை செய்து வருவதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல் தெரிவித்துள்ளார். கலவரத்தை தூண்டும் வகையில், வதந்திகள் பரவுவதை தடுக்க, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.