கலவரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
Feb 27 2020 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக, தற்போது வழக்குப்பதிவு செய்ய முடியாது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, பா.ஜ.க.வின் திரு.கபில் மிஸ்ரா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும், வழக்குப்பதிவு தொடர்பாக நீதிமன்றத்திற்கு இன்று தெரிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக, தற்போது வழக்குப்பதிவு செய்ய முடியாது என டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கலவரங்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதற்கு பின்னரே வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும், அரசு தலைமை வழக்கறிஞர்திரு. துஷர் மேத்தா, காவல்துறை தரப்பில் பதில் அளித்தார். பதிலை, பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த கட்ட விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி திரு. முரளிதர், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி திரு. ஹரிஷங்கர் பிரசாத் அமர்வு இவ்வழக்கை இன்று விசாரித்தது குறிப்பிடத்தக்கது.