டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூசைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்
Feb 28 2020 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி வன்முறை சம்பவத்தில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் என, அக்கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரம், பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதி என்றும், அக்கட்சியைச் சேர்ந்த திரு.கபில் மிஸ்ராவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தான் காரணம் என்று மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவடேகர் குற்றம் சாட்டினார். கையில் ஆயுதங்களுடன், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூசைன், வன்முறையில் ஈடுபட்ட வீடியோ ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் யாரேனும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, கவுன்சிலர் தாஹிர் ஹூசைனை இடைநீக்கம் செய்து அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.