கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவியை மத்திய அரசு அறிவிப்பு
Mar 27 2020 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
Corona வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் முடக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், Corona வைரஸ் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்தார். இதன்படி, இந்தியா முழுவதும் உள்ள 80 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, ஒருகிலோ பருப்பு ஆகியன இலவசமாக வழங்கப்படும். அடுத்த 3 மாதங்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்படவுள்ளன. Jan Dhan திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்துள்ள 20 கோடியே 40 லட்சம் பெண்களுக்கு ஒருமுறை நிவாரண உதவித்தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்.
நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து, இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள 8 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு சமையல் எரிவாயு, கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்படும் - ஏழை-எளிய மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை அளிக்கப்படும். மேலும் பல்வேறு உதவி மற்றும் சலுகை திட்டங்களையும் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.