அமெரிக்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலி - இந்தியாவில் உயிரியல் பூங்கா விலங்குகளை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு
Apr 6 2020 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக இந்தியாவில் உயிரியல் பூங்காளில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. ஆனால் மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இருக்கும் Bronx உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வந்த பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடியா என்ற அந்த புலி வறட்டு இருமல் மற்றும் பசியின்மையால் அவதிப்பட்டு வந்ததை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த புலியின் வளர்ப்பாளருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருந்ததாகவும், அவரிடம் இருந்து புலிக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்ற கூற்று பொய்யாகியுள்ளது. அமெரிக்காவில் புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்கா விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.