மஹாராஷ்ட்ரா கடலோரப் பகுதிகளில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பேயாட்டம் போடும் நிசார்கா புயல் - காற்றில் பறந்தன கட்டடங்களின் மேற்கூரைகள்
Jun 3 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மேற்கு அரபிக்கடலில் உருவான 'நிசார்கா' புயல், மஹாராஷ்ட்ராவின் அலிபாக் அருகே கரையை நெருங்கியபோது சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி வீசியது. இதனால், அப்பகுதியில் இருந்த கட்டடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த நிசார்கா புயல், மும்பைக்கு தெற்கே அலிபாக் பகுதியிலிருந்து இன்று மதியம் கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, மஹாராஷ்டிர மாநிலத்தின், மும்பை, வடக்கு கொங்கன், பால்கர், தானே, ராய்கட் போன்ற இடங்களில் கனமழையுடன் பலத்த காற்று வீசியது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடலோர பகுதிகளில்6 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. 4 மணி நேரம் கரையை கடந்த புயலால், சுமார் 115 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி வீசியது. இதில் சில கட்டடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர பகுதிகளில் வசித்துவந்த ஒரு லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக மஹாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது. மும்பை மக்கள் 2 நாட்களுக்கு வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய மீட்பு குழுவினர் மும்பை விரைந்துள்ளனர்.