அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் - வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தானியங்கள் நீக்கம்
Jun 3 2020 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர்கள் திரு. பிரகாஷ் ஜவடேகர், திரு. நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அதன்படி, நாடு முழுவதும் விளைப்பொருட்களை தடையின்றி விற்பதற்காக, அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு ஓப்பதல் அளிக்கப்பட்டுள்ளது. தானியங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
நாட்டில் முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க வழிகாட்டுதல் குழுக்களை அமைக்கவும், விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகத்தின் பெயரை சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.