மாநிலங்களவையில் ரகளையில் ஈடுபட்ட 8 எம்.பி.க்களை ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவு - துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க மறுப்பு
Sep 21 2020 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்களை ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வேளாண் மசோதாக்கள் நேற்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநிலங்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு, மசோதாக்களை அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உரத்த குரலில் கண்டன முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தபோது, அந்த அமளிக்கிடையே, மசோதாக்கள் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அவர் அறிவித்தார்.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில், மாநிலங்களவை துணைத் தலைவர் நடந்துகொண்ட விதமும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் மசோதாக்களை அவசர அவசரமாக அவர் நிறைவேற்றிய செயலும், ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசிய மாநாட்டுக் காட்சி, ஆம்ஆத்மி உள்ளிட்ட 12 கட்சிகளின் உறுப்பினர்கள், மாநிலங்களவைத் துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்தும் இட்டனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டதாகக்கூறி 8 எம்.பி.க்களை ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்வதாக அவைத்தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு இன்று உத்தரவு பிறப்பித்தார். உறுப்பினர்கள் திரு. தெரிக் ஓ பிரையன், திரு. இளமாறன் கரீம், திரு. சஞ்சய் சிங், உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், மாநிலங்களை துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.