கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உயிரிழந்த விவகாரம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்
Jan 19 2021 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 16-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட, உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த, 46 வயதாகும் சுகாதாரப் பணியாளர் மஹிபால் சிங் என்பவர் திடீரென உயிரிழந்தார். இதே போல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதாகும் நபர் மரணமடைந்தார்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இரண்டு பேரும் உயிரிழக்கவில்லை என்றும், மாரடைப்பு மற்றும் இருதய செயலிழப்பு போன்ற காரணங்களால் இருவரும் மரணமடைந்ததாகத் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 580 பேருக்கு மட்டுமே லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.