புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து மக்கள் விடுதலை பெற்றுள்ளனர் - பிரதமர் நரேந்திர மோதி பேச்சு
Feb 25 2021 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் இதுவரை மக்களுக்கான அரசு அமையவில்லை என்று பிரதமர் திரு. மோடி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று புதுச்சேரி மக்கள் தற்போதுதான் விடுதலை காற்றை சுவாசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் திரு. நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 22-ம் தேதி கவிழ்ந்தது. மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுச்சேரி வருகை தந்தார். பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். புதுச்சேரியில் இதுவரை மக்களுக்கான அரசு அமையவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று புதுச்சேரி மக்கள் தற்போதுதான் விடுதலை காற்றை சுவாசிப்பதாகவும் தெரிவித்தார். புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், இனி புதுச்சேரிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் கூறினார். காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி நடந்த புதுச்சேரி அரசு, மாநில நிர்வாகத்தை சீரழித்து விட்டதாக தெரிவித்தார். திரு. ராகுல் காந்தியின் புதுச்சேரி வருகையின்போது, மீனவப் பெண்மணி ஒருவர் வைத்த குற்றச்சாட்டுக்கு, திரு.நாராயணசாமி பொய் கூறியதையும் பிரதமர் திரு. மோடி சுட்டிக் காட்டினார். புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலில், மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.