திருப்பதி விமான நிலையத்தில் தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு திடீர் தர்ணா - ஆளும் கட்சியினர் அராஜக செயலில் ஈடுபடுவதாக கூறி போராட்டம்
Mar 1 2021 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் ஆளுங்கட்சியின் முறைகேடுகள் மற்றும் அராஜகங்களைக் கண்டித்து போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து தெலுங்குதேசம் கட்சித்தலைவர் திரு.சந்திரபாபு நாயுடு, திருப்பதி விமான நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திராவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், எதிர்க்கட்சியினரை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், ஆளும் கட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து திருப்பதி மற்றும் சித்தூரில் போராட்டம் நடத்த தெலுங்குதேசம் கட்சித்தலைவர் திரு.சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். இதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு வந்த திரு.சந்திரபாபு நாயுடு, விமான நிலையத்தில் இருந்து வெளியேற தடை விதித்த அதிகாரிகள், அவரை அதே விமானத்தில் விஜயவாடாவுக்கு திருப்பி அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். இதைக் கண்டித்து, திரு.சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே, சித்தூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்குதேசம் கட்சித்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.