நாடு முழுவதும் இதுவரை 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை தகவல்
May 14 2021 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் நேற்று வரை 18 கோடி டோஸ் கோரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமான கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி மருந்து அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வரை 17 கோடியே 91 லட்சத்து 77 ஆயிரத்து 29 டோஸ் தடுப்பூசி மருந்து நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 18 வயதிலிருந்து 44 வயது வரையிலான பிரிவினரில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 192 பேருக்கு நேற்று, முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவினரில், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 39 லட்சத்து 14 ஆயிரத்து 688 பேர் நேற்று வரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மருத்துவப் பணியாளர்களில் 96 லட்சத்து 16 ஆயிரத்து 697 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 66 லட்சத்து 2 ஆயிரத்து 553 பேர் 2-வது கட்ட தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1 கோடியே 43 லட்சத்து 14 ஆயிரத்து 563 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 81 லட்சத்து 12 ஆயிரத்து 476 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 42 லட்சத்து 32 ஆயிரத்து 598 பேருக்கு, முதல் டோஸ் தடுப்பூசியும், 1 கோடியே 72 லட்சத்து 86 ஆயிரத்து 501 பேருக்கு, 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதுவரை 18 கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.