லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதை கண்ணால் பார்த்த சாட்சியாக 23 பேர் உள்ளனர் : 16 எதிரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு தகவல்
Oct 27 2021 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் 16 எதிரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு நேற்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் 16 எதிரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்கில், சாட்சிகளாக உள்ள 68 பேரில், 30 பேரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் மீது கார் ஏறியதை கண்ணால் பார்த்த சாட்சியாக 23 பேர் உள்ளதாகவும், உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இருந்த நிலையில், வெறும் 23 பேர்தான் சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், சாட்சியங்களை விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.