பிரதமருக்காக தனி விமானம் வாங்க 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும்போது, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க மட்டும் நிதி இல்லையா? - பிரியங்கா காந்தி கேள்வி
Dec 2 2021 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தான் பயணிப்பதற்காக, 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து பிரதமர் தனியார் விமானத்தை வாங்கும்போது, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க மட்டும் நிதி இல்லை எனக்கூறுவது, வியப்பை ஏற்படுத்துவதாக திருமதி. பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், உத்தரபிரதேச வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்த்தில், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், தொழில் உற்பத்தி மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும் என்றும் திருமதி. பிரியங்கா காந்தி குறிப்பிட்டார். வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறிதும் மதிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்த, மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என குறிப்பிட்ட திருமதி. பிரியங்கா காந்தி, விவசாயிகளுக்கான இந்த நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். அதே வேளையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணிப்பதற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தனியார் விமானத்தை வாங்கவும், 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றத்தை கட்டவும் மட்டும் மத்திய அரசிடம் நிதி இருக்கிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.