ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தடை நாடு முழுவதும் இன்று முதல் அமல் - தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்த மாநில அரசுகள் தீவிரம்
Jul 1 2022 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் இன்று முதல் தடை செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடி, பலூன் மற்றும் மிட்டாயில் இருக்கும் பிளாஸ்டிக் குச்சி, ஐஸ்கிரீம் குச்சி, அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல், சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.