விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய நாடு தழுவிய போராட்டம் - டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது
Aug 5 2022 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக டெல்லியில் திரு. ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக இன்று நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்திவரும் நிலையில், அக்கட்சியின் எம்.பிக்கள், நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடையுடன் வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திருமதி. சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக திரு. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள், குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், வாகனங்களில் அழைத்து சென்றனர். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட திருமதி. பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியை தவிர பிற இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், மற்ற இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், எனவே தடை உத்தரவை மீறி பேரணி சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.