நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயார் - ரிசர்வ் வங்கி சக்தி காந்ததாஸ் தகவல்
Aug 5 2022 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிகளுக்கான வட்டி விகிதம் பூஜ்ஜியம் புள்ளி ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 4 புள்ளி ஒன்பது சதவீதத்தில் இருந்து 5 புள்ளி நான்கு சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், பண வீக்கம் அதிகரித்துள்ளதால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளுமென உறுதியளித்த திரு. சக்திகாந்த தாஸ், இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருக்கவும், அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி இந்திய ரூபாய் மதிப்பீட்டின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 புள்ளி ஏழு சதவீதம் சரிவடைந்தாலும், பல ஆசிய நாடுகளை விட ரூபாயின் மதிப்பு சிறப்பாக உள்ளதாக அவர் கூறினார். இந்தியப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாகவும், பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும், விரைவில் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.