டெல்லி மாநராட்சி தேர்தல் தோல்விக்கு கட்சி செய்த தவறுகளே காரணம் - ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல்
Apr 29 2017 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறி வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அண்மையில் நிறைவடைந்த டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்விக்கு ஆம் ஆத்மி கட்சி செய்த தவறுகளே காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார்.
டெல்லியில் அண்மையில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. அம்மாநிலத்தில் உள்ள 3 மாநகராட்சியையும், தொடர்ந்து 3-வது முறையாக பாரதிய ஜனதா வென்றது. மொத்தம் உள்ள 270 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, 48 இடங்களை மட்டுமே கைப்பற்றி பெரும் பின்னடைவை சந்தித்தது. தேர்தல் தோல்வியால் மிகுந்த அதிர்ச்சியடைந்த கெஜ்ரிவால், மின்னணு வாக்கு இயந்திரம் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனிடையே, ஆம் ஆத்மியின் தோல்வி குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கட்சியில் ஏதோ தவறுகள் நடந்திருப்பதால் மாநகராட்சி தேர்தலில் தோற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 2 தினங்களாக தான் கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களிடம் பேசியதாகவும், அப்போது உண்மைத்தன்மை வெளிப்படையாக தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதற்கு இதுதான் சரியான நேரம் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.