3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடு பயணம் - போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை
Jun 24 2017 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோடி முதற்கட்டமாக இன்று காலை டெல்லியில் இருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு புறப்பட்டார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு முறை பயணமாக, இன்று காலை போர்ச்சுக்கல் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். போர்ச்சுக்கலில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்படும் திரு. மோடி, நாளை மற்றும் நாளை மறுநாள் அங்கு தங்கவிருக்கிறார். அதிபர் டொனால்டு டிரம்புடன் முக்கியபேச்சுவார்த்தை நடத்தும் திரு.மோடி, விசா கட்டுப்பாடுகளால் இந்திய ஐ.டி. ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என்றும் தெரிகிறது.
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, 27-ம் தேதி நெதர்லாந்து செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்றே டெல்லி திரும்புகிறார். இந்த பயணத்தில் 3 நாட்டு தலைவர்களையும் சந்தித்து திரு. மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டுக்கு முதன்முதலாக பிரதமர் திரு. மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க பயணம் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை பலப்படுத்துவதுடன், உலகிற்கே நன்மை பயக்கும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளார்.