உத்தரப்பிரதேச மாநிலத்தில் 23 பேரை பலிகொண்ட ரயில் விபத்து - சம்பவ பகுதியில் தண்டவாள சீரமைப்புப் பணி 2ம் நாளாக இன்றும் நீடிப்பு
Aug 21 2017 7:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் தண்டவாள பாதையை சீரமைக்கும் பணி 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடைந்து மீண்டும் அவ்வழியாக ரயில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் நேற்று முன்தினம் மாலை பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்தது. உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்ததில், 23 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 156 பேர், முஸாஃபர் நகர் மற்றும் மீரட் நகரங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ரயில்பெட்டிகள் தூக்கிவீசப்பட்டும், தண்டவாளங்கள் சிதைந்து சின்னாபின்னமானதாலும், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. நேற்றே இதனை சீரமைக்கும் பணி தொடங்கியது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த ரயில்பெட்டிகள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், மிகக்கடுமையாக சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியும் 2ம் நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இந்த பணிகள் முடிந்து, இந்த பாதையில் ரயில்போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்தையடுத்து, பணியில் இருந்த அதிகாரிகள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.