முத்தலாக் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் - 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தல்
Aug 22 2017 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முத்தலாக் நடைமுறையை 6 மாத காலத்திற்கு அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முத்தலாக் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய பெண் ஒருவர் தொடுத்த 5 ரிட் மனுக்கள் உள்ளிட்ட 7 மனுக்கள், கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது மிகவும் முக்கியமான பிரச்னை என்று கூறிய உச்சநீதிமன்றம், இதுகுறித்த மனுக்களை, அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவித்தது.
அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் திரு. குரியன் ஜோசப், திரு. ஆர்.எஃப். நாரிமன், திரு. யு.யு. லலித், திரு. அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில், அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம் மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், முத்தலாக் நடைமுறையை 6 மாத காலத்திற்கு அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், முத்தலாக் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது.