சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்த ஓட்டல் அறை மூன்றரை ஆண்டுக்கு பின் ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
Oct 17 2017 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்த ஓட்டல் அறை, மூன்றரை ஆண்டுக்கு பின், ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக டெல்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவர் தங்கியிருந்த அறையை, டெல்லி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த அறையை ஒப்படைக்கக் கோரி, ஓட்டல் நிர்வாகம் சார்பில், டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த அறையை ஒப்படைக்கும்படி, நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ஆறு நாட்களுக்குள் ஓட்டல் அறையை ஒப்படைக்க வேண்டும் என, டெல்லி போலீசாருக்கு, கடந்த 10-ம் தேதியன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஓட்டல் அறை தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, ஓட்டல் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் கூறியது.