தாஜ்மஹாலைப் போல் ராஷ்டிரபதிபவனையும் இடிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் சர்ச்சைக்குரிய பேச்சு : தொழிலாளர்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் உருவானது தாஜ்மஹால் என உ.பி. முதலமைச்சர் கருத்து
Oct 17 2017 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாஜ்மஹால், அடிமையின் சின்னமாக இருப்பதால், அதனை இடித்துத் தள்ள வேண்டும் என ஏற்கெனவே சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம்கான், தற்போது, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனையும் இடிக்க வேண்டும் என கூறியிருப்பது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலங்கள் வரிசையில் இடம்பெற்ற தாஜ்மஹால், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நினைவுச் சின்னத்தை, அடிமைகளைக் கொண்டு ஷாஜஹான் உருவாக்கியதால், அதனை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம்கான் அண்மையில் பரபரப்பாக பேசினார். இதனைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. சங்கீத் சாம் என்பவரும், இந்திய கலாச்சாரத்தின் மீதான கரை என்று தாஜ்மஹால் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதனால் கடும் அதிருப்தியடைந்த இஸ்லாமிய அமைப்பினர் சிலர், டெல்லியில் உள்ள செங்கோட்டை, தேசியக் கொடி ஏற்றி வைக்கும் இடமாக இருப்பதை இவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்தநிலையில், மீண்டும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசம்கான், செங்கோட்டை மட்டுமல்ல, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கூட அடிமைச் சின்னம் என்பதால், அதனையும் தகர்க்க வேண்டும் என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இந்த பரபரப்புக்கு மத்தியில், இதுபற்றி தனது கருத்தைத் தெரிவித்திருக்கும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், தாஜ்மஹால், இந்திய உழைப்பாளிகளின் வியர்வையாலும், ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டது; அதை யார் கட்டினார்கள் என்பது முக்கியமல்ல எனக் கூறியுள்ளார். வரும் 26-ம் தேதி, தான் ஆக்ரா சென்று, தாஜ்மஹாலை பார்வையிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், தாஜ்மஹால் விவகாரம் தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.