புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை கண்டித்து அபிஷேகப்பபாக்கம் கிராமத்தில் பொதுமக்கள் சாலைமறியல் : அதிகாரிகள் பேச்சுவார்தையையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Oct 19 2017 6:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை கண்டித்து, அபிஷேகப்பபாக்கம் கிராமத்தில் மாநில அரசைக்கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்தையையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
புதுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மாநில அரசைக்கண்டித்து அபிஷேகப்பபாக்கம் கிராமத்தில் மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக சாலை மறியல் தொடர்ந்ததால், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அபிஷேகப்பாக்கம் வழியே செல்லும் மடுகரை, நெட்டப்பாக்கம், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், டி.என்.பாளையம் ஆகிய கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
புதுச்சேரி அரசு ஐந்தாண்டுக்கு பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு 75 பைசாவும், குறைந்த பட்ச கட்டணமாக 6 கிலோ மீட்டருக்கு 8 ரூபாயை உயர்த்தியதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.