முதுநிலை மருத்துவ சேர்க்கை தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு - டெல்லி போலீசாரே விசாரிப்பார்கள் என்றும் அறிவிப்பு
Nov 24 2017 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கை டெல்லி போலீசாரே திறம்பட விசாரிப்பார்கள் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கோ, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கோ உத்தரவிட முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக, கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 11 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ, சி.பி.ஐ.க்கோ மாற்ற உத்தரவிடக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், விசாரணையின் தற்போதைய நிலவரம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கை டெல்லி போலீசாரே திறம்பட விசாரிப்பார்கள் என்றும், எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கோ, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கோ உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.