பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் 16-வது நினைவுதினம் அனுசரிப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி
Dec 13 2017 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ஜனநாயகத்தின் மையப்புள்ளியாக கருதப்படும் நாடாளுமன்றம் மீது, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது, கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் தான் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த வாகனத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுடத் தொடங்கினர். துப்பாக்கி வெடி சத்தத்தில் நாடாளுமன்றம் அதிர்ந்து போனது. என்ன நடக்கிறது என்று சுதாகரிப்பதற்குள், பாதுகாப்புப் படை வீரர்கள் குண்டுபாய்ந்து சரிந்து விழுந்தனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோதும், 6 டெல்லி போலீசாரும், 2 நாடாளுமன்ற பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்ற தோட்டக்காரரும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
மூன்றரை ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், 2005 ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ மொஹமது பயங்கரவாத குழுவைச் சேர்ந்த கிலானி, சவுகத் மற்றும் அஃப்சல் குரு ஆகியோருக்கு மரணதண்டனை விதித்தது.
மேல்முறையீட்டில் கிலானி விடுவிக்கப்பட்டு, சவுகத் மற்றும் அஃப்சல் குரு மீதான மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் சவுகத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. இறுதியாக, 2013-ம் ஆண்டு அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் திரு. ராஜ்நாத் சிங், திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர்.