அணு ஆயுதங்களை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி
Jan 18 2018 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அணு ஆயுதங்களை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒடிஷாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. அதன்படி, இந்தியாவிடம் பிருத்வி, தனுஷ் மற்றும் 4 வகை அக்னி ஏவுகணைகள் உள்ளன. அதில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டரும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டரும், அக்னி-3 ஏவுகணை 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டரும், அக்னி 4 ஏவுகணை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரமும் சென்று தாக்கும் திறன் படைத்தவை.
அந்த வரிசையில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாயும் அக்னி-5 ஏவுகணை உருவாக்கப்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு முதன் முதலாக சோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2013, 2015, 2016-ம் ஆண்டுகளிலும் சோதித்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் அக்னி-5 ஏவுகணையின் இறுதி சோதனை இன்று நடைபெற்றது. இன்று காலை 9.53 மணிக்கு, ஒடிஷாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்ட அக்னி-5 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்தது. இந்த ஏவுகணையில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதி துல்லிய வழிகாட்டுதல் முறைகள், நுண்ணிய வழிகாட்டுதல் முறைகள் இதில் புகுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணையை ராணுவ வாகனத்தில் எங்கு வேண்டுமென்றாலும் எளிதாக எடுத்துச் சென்று, அங்கிருந்தபடி தாக்குதல் நடத்த முடியும். கண்டம் விட்டு கண்டம் பாயும் இவ்வகை ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அக்னி-5 ஏவுகணை சோதனையின் வெற்றி மூலம் தற்போது அந்நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.