மகாராஷ்டிராவில் சாலையோர தடுப்பில் மோதி லாரி கவிழ்ந்த விபத்து - 17 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலி - மேலும் பலர் காயங்களுடன் உயிருக்கு போராட்டம்
Apr 10 2018 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சல பிரதேசத்தில், பள்ளிப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சாலையோர தடுப்பில் லாரி மோதிய விபத்தில் 17 பேர் பலியாகினர்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் காங்காரா மாவட்டத்திலுள்ள நார்பூர் பகுதியில், பள்ளிக் குழந்தைகள் சென்ற பேருந்து, மலையில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 30 குழந்தைகள் உயிரிழந்தன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பல குழந்தைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பேருந்துக்குள் மாணவர்கள் பலர் சிக்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பேருந்தில் அதிக அளவில் குழந்தைகள் ஏற்றப்பட்டதாக, முதல்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதனிடையே, மகாராஷ்ட்ர மாநிலம் கந்தாலா பகுதியில் சாலையோர தடுப்பில் லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சதாரா - புனே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினிலாரி சென்று கொண்டிருந்தது. கந்தாலா பகுதி அருகே லாரி வந்த போது அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 17 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.