வன்கொடுமை தடுப்பு சட்டம் மீது பிறப்பித்த உத்தரவு சரியானதே : மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்
May 17 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இதில் எந்த உத்தரவும் மீண்டும் பிறப்பிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில், விசாரணையின்றி யாரையும் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தன.
இதன் மீதான விசாரணை, நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில் மாற்றம் செய்யவோ, அதில் துணை ஏற்பாடு செய்து உத்தரவிடவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என வாதிட்டார்.
இருந்தபோதிலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்திய நீதிபதிகள், இந்த தீர்ப்பில் மீண்டும் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை நியாயப்படுத்தும் விதமாக கருத்துக்களையும் தெரிவித்தனர். பின்னர், வழக்கின் விசாரணையை கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.