கர்நாடக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் யார்? : பா.ஜ.க., காங்கிரஸ் சார்பாக இருவரின் பெயர்கள் பரிந்துரை
May 18 2018 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக இருக்க, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் சார்பாக இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக சட்டப் பேரவையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்காலிக சபாநாயகராக இருவர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் ஆர்.வி.தேஷ் பாண்டே மற்றும் பாரதிய ஜனதாவை சேர்ந்த உமேஷ் கர்தி ஆகியோரின் பெயர்களை, கர்நாடக சட்டமன்ற செயலாளர், ஆளுநர் வஜூபாய் வாலாவிற்கு பரிந்துரைத்துள்ளார். இருவருமே 8 முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அதிகபட்சம் 7 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், ஆளுநர் வஜூபாய், பா.ஜ.க.வுக்கு 15 நாட்கள் அளித்தது சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்த அவர், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வைத்தாலும், பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் தயாராக இருப்பதாக கூறினார்.