காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜுன் ஒன்றாம் தேதிக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - அணை நீர் இருப்பு, நீர் வரத்து விவரங்களை மாதந்தோறும் அரசிதழில் வெளியிடவும் ஆணை
May 18 2018 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆணையத்தை, ஜுன் மாதத்திற்குள் அமைத்து, அதனை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதித்து வந்த மத்திய அரசு, நீண்ட இழுபறிக்குப்பிறகு கடந்த 14ம் தேதி, நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களை மாற்றம் செய்து தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து, நேற்று அதுதொடர்பான திருத்த வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக, மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. வாரியத்தைவிட ஆணையத்திற்கு அதிகாரங்கள் கூடுதலாக இருக்கும் என்று அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் திருத்திய வரைவுத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் வரைவுத் திட்டத்தை உடனடியாக அரசு நாளிதழில் வெளியிட வேண்டும் - ஜுன் மாதத்திற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து உள்ளிட்ட விவரங்களை மாதந்தோறும் அரசிதழில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர்ப் பகிர்வில், புதிதாக உருவாக்கப்படும் மேலாண்மை ஆணையத்திற்கே முழு அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, நீர் இருப்பு விருப்பத்தை தெரிவிக்க கர்நாடகா மறுத்ததையும் நிராகரித்த உச்சநீதிமன்றம், வழக்கை முடித்துவைத்தது.