வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு
Jun 18 2018 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டமைப்பிடம், ஆறாயிரத்து 27 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், பிரிட்டனில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
பல்வேறு பொதுத்துறை வங்கிகளில், 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து, சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விஜய் மல்லையா மீது, கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், இதுவரை அவருக்கு சொந்தமான 9 ஆயிரத்து 890 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், 2005-2010-ம் ஆண்டு காலகட்டத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல், இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு ஆறாயிரத்து 27 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக, பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, வாங்கிய கடனை போலியான பல்வேறு கம்பெனிகளில் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் மாற்றி இருப்பதை கண்டுபிடித்தது. இதனைத்தொடர்ந்து, விஜய் மல்லையா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
தலைமறைவாக உள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்தை, மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது. இச்சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்ய, நீதிமன்றத்தின் அனுமதியை பெறவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.