அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் - அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Jun 23 2018 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமர்நாத் புனித யாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதனை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வர். 40 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளும் ஐ.எஸ். இயக்கத்தின் காஷ்மீர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, யாத்திரை செல்லும் பாதையில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ராணுவ உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அமர்நாத் யாத்திரை செல்லும் வழியெங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசித்தனர்.
கடந்த வருடம் ஜூலை மாதம் அமர்நாத் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.