நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைகிறது : ரஃபேல் ஒப்பந்த விவகாரம் - எதிர்க்கட்சிகள் போராட்டம்
Aug 10 2018 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்றும், இரு அவைகளிலும், பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி. சோனியா காந்தியும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார பிரச்னை, வங்கி மோசடிகள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் குரல் எழுப்பினர். இதனால், இரு அவைகளும் கூச்சல் குழப்பம் காரணமாக சிறிது நேரங்கள் ஒத்திவைக்கப்பட்டாலும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட முக்கிய மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் அரசு காப்பகங்களில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி. சோனியா காந்தியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.