மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், 21 மசோதாக்கள் நிறைவேற்றம் - மாநிலங்களவையில் காங்கிரஸ் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
Aug 11 2018 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனிடையே, மாநிலங்களவையில் காங்கிரஸ் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார பிரச்சனை, வங்கி மோசடிகள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் குரல் எழுப்பினர். இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியதால் பலமுறை ஒத்திவைக்க நேர்ந்தது. கடைசி நாளான நேற்றும் ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பை வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர், மக்களவையில் குரல் எழுப்பினர்.
இதையடுத்து, கூட்டத்தொடர் நிறைவடைந்ததையொட்டி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி உட்பட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், இது தொடர்பாக அவையில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, காங்கிரஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் துணை சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரு. ஹரிபிரசாத் எம்.பி, சபாநாயகர் திரு. வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார். இதையடுத்து, ஹரி பிரசாத்தின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடியின், காங்கிரஸ் மீதான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.