வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரிப்பு - வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரில் ஆய்வு
Aug 12 2018 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்ததால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 531 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 60 ஆயிரத்து 622 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் வயநாடு, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 4 நாட்களில் கேரள மாநிலத்தில் சுமார் 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 21 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மழை, வெள்ளத்தால் மொத்தம் 1501 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 101 வீடுகள் முற்றிலும் இடிந்தநிலையில் இருப்பதாகவும் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதனிடையே இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால், 40 வருடங்களுக்கு பிறகு ஐந்து மதகுகள் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கேரள மாநிலத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால், மலப்புரம், பாலக்காடு, எர்ணாக்குளம் ஆகிய பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் 32 பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று கேரளா செல்கிறார். கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் அமைச்சர், பின்னர், அம்மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.