ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் திடீர் ராஜினாமா - இந்தியர்கள் கவலைப்படவேண்டிய விவகாரம் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து
Dec 11 2018 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கால், ஆளுநர் உர்ஜித் படேல், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மத்திய அரசுக்கு பரவலாக கண்டனம் எழுந்துள்ளது.
உர்ஜித் படேல் ராஜினாமா செய்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகல் பெரும் கவலைக்குரியது என்றும், அரசு அதிகாரி தன்னுடைய ராஜினாமாவை அறிவிப்பது என்பது எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய வங்கியை விமர்சனம் செய்த நிலையில், உர்ஜித் படேல் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா மிகவும் வருந்தத்தக்கது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக கருத்து தெரிவித்தார். இந்தியாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கையில் அக்கறை கொண்ட உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது, நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என திரு.மன்மோகன் சிங் கூறினார்.
ரிசர்வ் வங்கியை ஒரு குழுவினரால் நடத்தப்படும் நிறுவனமாக மாற்ற மத்திய அரசு நினைப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசின் பொருளாதார சீர்குலைவை சரிகட்டுவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை பறிக்க முயற்சிப்பதாகவும் விமர்சனம் செய்தார்.
உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார். உர்ஜித் படேல் மிகவும் உயர்ந்த திறமை கொண்ட ஒரு பொருளாதார நிபுணர் என்றும், வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதி செய்தவர் என்றும் கூறினார்.