கொல்கத்தா காவல் ஆணையரை விடுவித்தது சிபிஐ - மேகாலயாவிலிருந்து மேற்குவங்கம் செல்ல அனுமதி
Feb 13 2019 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் இன்றும் 3 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரை மேற்குவங்கம் செல்ல அனுமதி அளித்தனர்.
மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவரும், கொல்கத்தா காவல் ஆணையருமான ராஜீவ் குமார், ஆதாரங்களை அழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டதுடன், அவரை கைது செய்யவோ, வற்புறுத்தி வாக்குமூலம் பெறவோ கூடாது என சிபிஐ-க்கும் அறிவுறுத்தியது.
இதனையடுத்து, ராஜீவ் குமாரிடம் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் 3 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மேற்குவங்கம் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் ராஜீவ் குமார் கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.