140 போர் விமானங்கள், ஏவுகணைகளுடன் இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை - மீண்டும் ஒரு துல்லியத் தாக்குதலுக்கு திட்டம்?
Feb 18 2019 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தி உள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவத்தினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தி 40-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்திருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் செயல், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் சோகத்தையும், கோபத்தையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடிப்பிடித்து பழிதீர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் 'வாயு சக்தி' என்ற பெயரில் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதில், தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, வானில் இருந்து வான் இலக்கை தகர்க்கும் அஸ்திரா ஏவுகணை போன்றவை இரவிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தங்கள் வலிமையை உறுதி செய்தன.
இதைத்தவிர மிக்-29 தாக்குதல் ரக விமானம், சுகோய்-30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21 பைசன், மிக்-27, ஐ.எல்.78, ஹெர்குலிஸ், ஏ.என்.32 போன்ற விமானங்களும் இந்த ஒத்திகையில் சிறப்பாக செயல்பட்டன.
புலவாமா தாக்குதல் நடந்த ஓரிரு நாளில் விமானப்படை போர் ஒத்திகையை நடத்தி இருப்பதன் மூலம் மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு இந்திய படையினர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.