ஐசிஐசிஐ வங்கியில் முறைகேடாக கடன் வழங்கிய விவகாரம் - சாந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
Feb 22 2019 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் சாந்தா கோச்சார் இருந்தபோது, 2012-ம் ஆண்டில் வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ சார்பாக 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. விதிமுறைகளுக்கு மாறாக இந்த கடன் வழங்கப்பட்டதாகவும், அதற்கு கைமாறாக வீடியோகான் மேலாண் இயக்குநர் வேணுகோபால், சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தும் நிறுவனத்தில் மறைமுகமாக 64 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, சாந்தா கோச்சார் பதவி நீக்கம் செய்யப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும மேலாண் இயக்குநர் வேணுகோபால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அமலாக்கத்துறையும், சாந்தா கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் சாந்தா கோச்சார் உள்ளிட்டோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து, சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்கள், இமிக்ரேஷன் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.