கேரளாவில் 19 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் - வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெற்றி - இடது ஜனநாயக முன்னணி படுதோல்வி
May 24 2019 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, வயநாடு தொகுயில் வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம், அமேதி தொகுதியில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். மேலும், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியிலும் அவர் போட்டியிட்டார்.
இவ்விரு தொகுதிகளில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் திரு.ராகுல்காந்தி வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம், அமேதி தொகுதியில் அவர் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். திரு.ராகுல்காந்தியை விட 55 ஆயிரத்து120 வாக்குகள் அதிகமாக பெற்று திருமதி ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரெலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, திரு.ராகுல்காந்தியின் தாயாரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான திருமதி. சோனியாகாந்தி 5 லட்சத்து 34 ஆயிரத்து 918 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி ஆலப்புழா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.