சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
Jun 21 2019 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் யோகாவிற்கு வரவேற்பு பெருகி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் யோகா மீது ஆர்வம் கொண்டுள்ளதால், அந்நாடுகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. யோகாவை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் யோகா தினம் கொண்டாடபட்டது. முதுகு வலி உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வு காணும் வகையில், சலபாசனம், தன்வர் ஆசனம் உள்ளிட்ட யோகா முறைகளை செய்து காண்பித்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சைக்கிள் கடை வைத்துள்ள யோகா மாஸ்டர் கணேசன் என்பவர், கடந்த 40 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையில், நூற்றக்கும் மேற்பட்டோருக்கு யோகாசனக் கலையை பயிற்றுவித்து வருகின்றார். கட்டணம் ஏதுமின்றி, நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இவரிடம் யோகக்கலையை பயின்று வருகின்றனர்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூரில் செயல்படும் தனியார் பள்ளியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் யோகாசனங்களை செய்து காண்பித்தனர். யோகாசனம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவ- மாணவிகளிடையே ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டரும், பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியவருமான டிராகன் ஜெட்லி, சர்வதேச யோகா தினத்தையொட்டி புதிய உலக சாதனை நிகழ்த்தினார். கடந்த ஆண்டு 20 அடி உயர டேபிள் மீது சிரசாசனத்தில் தலைகீழாக 2 நிமிடம் நின்று லிம்கா சாதனைபுத்தகத்தில் இடம்பெற்ற நிலையில், இதனை முறியடிக்கும் விதமாக, 20 அடி உயர டேபிள் மீது சிரசாசனத்தில் 3 நிமிடம் 10 வினாடிகள் நின்றபடி புதிய சாதனை நிகழ்த்தினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பல வண்ண ஆடைகள் அணிந்தபடி பங்கேற்றனர். தொடர்ந்து குழுவாக சேர்ந்து பிரமிட் அமைத்து போகாசனம் செய்தும், கயறு கட்டியும் யோகாசனம் செய்தனர்.