ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், அஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லையில் ஊடுருவ முயற்சி - உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
Aug 23 2019 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் ஊடுருவ எல்லையில் தயாராக இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தீவிரவாத அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன், அஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் ஊடுருவ எல்லையில் தயாராக இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளும், அஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தீவிரவாதிகளும் ஊடுருவுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் எஸ்எஸ்ஜி என்ற பாதுகாப்புப் படையினர் முழு அளவில் பயிற்சி அளித்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தத் தீவிரவாதிகள் வடக்கு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு அருகே Lipa பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாகவும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், இந்தத் தீவிரவாதிகள் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும், நாச வேலைகளில் ஈடுபடுவதற்கும் தயாராக இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.