பிரான்சில் நடைபெற்று வரும் ஜி-7 அமைப்பின் 45-வது மாநாட்டில் பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
உலகின் ஏழு நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு ஜி7 என அழைக்கப்படுகிறது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஜி-7 அமைப்பின் 45-வது மாநாடு பிரான்ஸ் நாட்டில் உள்ள பையாரிட்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் G7 மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் கூடினர்.
பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இந்த முறை G7 மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க - சீன வர்த்தகப் போர், ஈரானுக்கெதிரான பொருளாதாரத் தடை, அமேசான் மழைக்காட்டில் பரவியுள்ள தீ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதில் தாமதம் உள்ளிட்ட விவகாரங்கள், தலைவர்களின் உரையில் இடம்பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, சுற்றுச்சூழல் பாதிப்பு, உலகமயமாக்கல், பாலஸ்தீன உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பியாரிட்ஸ் நகரின் அருகே பிரான்ஸ் - ஸ்பெயின் எல்லையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், கண்ணீர்ப்புகைப் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே G7 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களின் மனைவிகளை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மக்ரோன், அங்குள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக்காண்பித்தார். இதில் டிரம்ப் மனைவி மெலானியா டிரம்ப், ஜப்பான் பிரதமரின் மனைவி அகி அபே, சிலி அதிபர் மனைவி சிசிலியா மோரல் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜென்னி மோரிசன் ஆகியோர் அங்குள்ள சிறு கடைகளுக்கு நடந்து சென்று, அங்கு தயாரிக்கப்பட்ட சங்கிரியா என்ற உள்ளூர் பானத்தை சுவைத்து மகிழ்ந்தனர்.