பாலகோட் பயிற்சி முகாமில் பாகிஸ்தானின் தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு பயிற்சி - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பயங்கர சதித்திட்டம்
Oct 15 2019 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் பாலகோட் பயிற்சி முகாமில் தற்கொலைப்படையினர் உள்ளிட்ட 40 முதல் 50 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், பயிற்சி முடித்த சில தீவிரவாதிகள் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து முகாமை சிதறடித்தன. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதால் கொதித்துப் போன பாகிஸ்தான் பல நாடுகளிடம் முறையிட்டும், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஏவிவிடும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகள் பயிற்சி முகாம் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 45 முதல் 50 தீவிரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகளும் அடங்குவார்கள் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயிற்சி முடித்த சில தீவிரவாதிகள் காஷ்மீரில் நாசவேலைகளில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாத பயிற்சி முகாமை இந்திய உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.