நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது - 35க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
Nov 17 2019 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாளை தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 35-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், நாளை தொடங்கி டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் தற்போது, 43 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
இந்த கூட்டத்தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த மசோதாவுக்கு அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது. இது தவிர, தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம், மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், இ - சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, இ - சிகரெட் தடைச் சட்டம், ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவிட சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்நிலையில் நேற்று, மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிற கட்சிகளின் எம்.பி.,க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்ற விவகாரத்தை, குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சி மூத்த தலைவர் திரு. அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.