டெல்லியில் விற்பனை வரித்துறை அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து : 5 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள் தீயை அணைத்தனர்
Nov 21 2019 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் விற்பனை வரித்துறை அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டெல்லி I.T.O மெட்ரோ பகுதியில் வருமானவரித்துறை, விற்பனை வரி துறை என பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், விற்பனை வரித்துறை அலுவலகத்தின் 13வது மாடியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 8.20 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 10 நிமிடங்களில் தீயை அணைத்தன. மின்சார கோளாறு காரணமாக அலுவலக சாதனத்தில் ஏற்பட்ட தீ, மற்ற இடங்களுக்கு பரவுவதற்குள் தகவல் கிடைத்ததால் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்க முடிந்ததாக தலைமை தீயணைப்பு அதிகாரி திரு.அதுல் கார்க் தெரிவித்தார். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. ஆயினும், சேதம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.